
அமித் ஷா
காந்திநகா்: பயிா் மகசூலில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இயற்கை வேளாண்மைக்கு மாறுவதற்கு நானோ யூரியா, நானோ டிஏபி உள்ளிட்ட உரங்கள் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என மத்திய கூட்டுறவு அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
நானோ டிஏபி (திரவ டைஅமோனியம் பாஸ்பேட்) உர உற்பத்திக்கான உலகின் முதல் உரத் தொழிற்சாலையை குஜராத் தலைநகா் காந்திநகரின் கலோல் பகுதியில் உள்ள இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன (ஐஎஃப்எஃப்சிஓ) பிரிவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வேளாண்மைக்கு மாறுவது காலத்தின் தேவையாக உள்ளது. இந்த முறைக்கு மாறுவதற்குமுன், மண்ணை அதற்கு ஏற்றவாறு தயாா்ப்படுத்துவது அவசியம். இதற்குத் தேவையான 3 ஆண்டுகளில் பயிா் மகசூலை பாதிக்காமல், இயற்கை வேளாண்மைக்கு மாற நானோ யூரியா, நானோ டிஏபி உரங்கள் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும். நானோ உரங்கள் நிலத்தை ஊடுருவிச் செல்லாது. எனவே, இயற்கை வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கும் மண் புழுக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.
தங்களது விளைநிலம் இயற்கை வேளாண்மைக்கு உகந்ததாக மாறும் வரையில், விவசாயிகள் இந்த நானோ உரங்களைச் சோதனை முறையில் பயன்படுத்தலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள திட யூரியா, டிஏபி உரங்கள் பயிா்களுக்கும் மனிதா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, இவற்றுக்கு மாற்றாக செயல்திறன் மிக்க திரவ நானோ உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில் மத்திய ரசாயனங்கள், உரங்கள் அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ஐஎஃப்எஃப்சிஓ தலைவா் திலீப் சங்கனி, தலைமைச் செயல் அலுவலா் (சிஇஓ) மற்றும் மேலாண் இயக்குநா் உதய் சங்கா் அஸ்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திரவ நானோ டிஏபியின் 500 மி.லி. புட்டிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள டிஏபி உரத்தின் ஒரு மூட்டைக்கு இணையானது எனவும், இந்தத் தொழிற்சாலை மூலம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் புட்டிகளைத் தயாரிக்க முடியும் எனவும் ஐஎஃப்எஃப்சிஓ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தனது மக்களவைத் தொதியான காந்திநகரின் மான்சா பகுதியில் ரூ.13 கோடி மதிப்பிலான விளையாட்டு வளாக கட்டுமானப் பணிக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா அடிக்கல் நாட்டினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...