

தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதால் ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தென் மாநிலத்தின் மத்திய மாவட்டங்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இன்று ஆரஞ்சு எச்சரிக்கையைத் தொடர்ந்து நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் நாகரத்னா கூறுகையில்,
தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக, தெலங்கானாவில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதன்பின்னர் மழை படிப்படியாகக் குறையும்.
வடகிழக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் சில பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும். தெலங்கானாவின் வடக்கு மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தெலங்கானாவின் வடக்கு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.
மேலும், தாழ்வான பகுதிகளை துணை மேயர் மற்றும் டிஆர்எஃப் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். சாலைகளில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், உடைந்த மரங்கள் மற்றும் வளைந்த மின்கம்பங்களை அகற்றவும், போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.