
தில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார்.
அப்போது இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் இந்த சந்திப்புக்குப் பிறகு பைடனுக்கு சிறப்பு விருந்தும் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா-அமெரிக்கா நட்புறவு உலக நாடுகளின் நன்மைக்கு தொடர்ந்து பெரும்பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜி 20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இரவு இந்தியா வருகை புரிந்தார். தில்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் விகே சிங் வரவேற்றார். தொடர்ந்து, அமெரிக்க அதிபருக்கு இந்தியா சார்பில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்துள்ளார். 2020, பிப்ரவரியில் அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்திருந்தாா். பிரதமர் மோடி கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.