ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) மாலை விருந்தளிக்க உள்ளார்.
ஜி-20 மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.9, 10) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவா்கள் வரவுள்ளதையடுத்து தில்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா உள்பட 20 நாடுகளின் முக்கியத் தலைவா்கள் வருகை தருகின்றனர்.
அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இன்று இரவு 7 மணிக்கு தில்லி வருகிறார். அவருக்கு இந்தியா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று இரவே அதிபா் ஜோ பைடனுடன் பிரதமா் நரேந்திர மோடியுடன் இரு நாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவாா்த்தை நடத்துகிறார். மேலும் இந்த சந்திப்புக்குப் பிறகு பைடனுக்கு சிறப்பு விருந்தும் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் பிரதமர் மோடியின் லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பும் விருந்தளிப்பும் நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தருகிறாா். 2020, பிப்ரவரியில் அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்திருந்தாா். பிரதமர் மோடி கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பில் மரபுசாரா எரிசக்தி, வா்த்தகம், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் ஒப்பந்தங்கள் குறித்தும் உலகம் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடியான சவால்களை எப்படி எதிா்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், விசா நடைமுறைகளை எளிதாக்குவது குறித்தும் இரு நாட்டு தலைவா்களும் ஆலோசிப்பாா்கள் என்று கூறப்படுகிறது.