பாஜக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து எடியூரப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் மஜதவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிக்க | மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணியில் ம.ஜ.த.; 4 தொகுதிகள் ஒதுக்கீடு!
இந்நிலையில் இதுகுறித்து, கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி, 'எடியூரப்பா நேற்று பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து. இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் விவாதிக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக 2, 3 முறை சந்தித்துப் பேசினோம். என்ன நடக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம். மக்களின் முன் செல்வதற்கு ஒன்றுகூடி விவாதிப்போம். காங்கிரஸ் மாநிலத்தைக் கொள்ளையடிப்பதால் மக்களுக்கு இது தேவை. மக்களுக்கு மாற்று வழிகள் தேவை. நான் 2006-ல் பாஜகவுடன் கைகோர்த்தேன். எனது 20 மாத ஆட்சி நிர்வாகத்தால் நல்லெண்ணம் உருவானது' என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத தனித்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | வேறு எந்த ஜனநாயக நாடும் இப்படிச் செய்ததில்லை: ப. சிதம்பரம்