கேரளத்தின் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியுள்ளதால் மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஹைலஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கூறுகையில்,
மாநிலத்தில் கடந்த 2018-ல் நிபா வைரஸ் தொற்று முதன்முதலாகப் பரவியது. அப்போது இது எங்களுக்கு ஒரு புதிய வைரஸ், அத்தகைய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் எங்களுக்கு எந்தவித அனுபவமும் கிடையாது. ஆனால் இதனை திறம்படக் கையாண்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தினோம்.
ஆனால், தற்போது வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்துவித முன்னேற்பாடுகளும் வந்துவிட்டன. மாநிலத்தில் நிபா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் வைரஸ் தொற்று பற்றிய அறிவிப்பை புணேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மூலமே உறுதி செய்யமுடியும்.
கரோனா பரவலின் போது, ஆலப்புழாவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து கரோனா முடிவுகளை அறிவிக்க மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்றுள்ளது.
மத்தியக் குழு ஆலப்புழாவுக்குச் சென்று, தாங்களாகவே பரிசோதனை செய்து, முடிவுகளை வெளியிட கேரளாவுக்கு அனுமதி வழங்கியது. கரோனா பரவல் உச்சத்தை அடைந்ததும், மருத்துவக் கல்லூரி ஆய்வகங்களில் சோதனைகளை நடத்தவும் முடிவுகளை வெளியிடவும் எங்களுக்கு அனுமதி கிடைத்தது.
ஆனால் நிபாவைப் பொறுத்தவரை, மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே முடிவுகளை வெளியிட முடியும் என்றார்.
மூளையைச் சேதப்படுத்த இந்த வைரஸ் காய்ச்சலுக்கு கோழிக்கோட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.