இதன் பெயர்தான் மெடிக்கல் மிராக்கலோ? 2 இரும்புக் கம்பி குத்தியும் பிழைத்தவர்

இரண்டு இரும்புக் கம்பிகள் கட்டடத் தொழிலாளியின் உடலைக் கிழத்த பிறகு, அவர் அடுத்த நாள் உயிரோடு இருப்பார் என்று அங்கிருந்த யாருமே கருதவில்லை.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை
Published on
Updated on
1 min read

நாக்பூர்: 21 வயது கட்டடத் தொழிலாளி, கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து தலா 6 அடி நீளம், 16 மி.மீ. விட்டம் கொண்ட இரண்டு இரும்புக் கம்பிகள் அவரது உடலைக் கிழத்த பிறகு, அவர் அடுத்த நாள் உயிரோடு இருப்பார் என்று அங்கிருந்த யாருமே கருதவில்லை.

ஆனால் நடந்ததோ மெடிக்கல் மிராக்கல். 

ஆகஸ்ட் 19ஆம் தேதி கட்டடத்திலிருந்து விழுந்து, படுகாயத்துடன் மருத்துவமனையில் ரத்த வெள்ளத்தில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், செப்டம்பர் 9ஆம் தேதி, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு எந்த பெரிய பிரச்னையும் இருந்திருக்கவில்லை அப்போது.

ஒரு இரும்புக் கம்பி அவரது நெஞ்சப் பகுதியிலும், ஒரு இரும்புக் கம்பி அவரது வயிற்றுப்பகுதியிலும் பாய்ந்திருந்தது. ஆனால், அதிர்ஷ்டம் அவரது பக்கம் இருந்ததால், நெஞ்சுப் பகுதியில் இதயத்துக்கு அருகே நூலிழையில் பயணப்பட்டு வெளியேறிய இரும்புக் கம்பி, மற்ற எந்த முக்கியமான உறுப்பையும் கொஞ்சம் கூட டச் செய்யவில்லை.

அடுத்து, வயிற்றுப் பகுதி.. அங்கிருந்த குடல் பகுதிகளை எல்லாம் கிழிக்காமல், கச்சிதமாகச் சென்று சேர்ந்திருக்கிறது. அவர் மருத்துவமனைக்கு வரும் போது, உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகத்தான் இருந்தது. இரும்புக் கம்பிகளின் தடிமன், மிகப்பெரிய சவால். ஆனால், மருத்துவர்கள் ஒரு சிறு வாய்ப்பைக் கூட விட்டுவிடக் கூடாது என்று முடிவெடுத்தனர்.

முதலில் நோயாளியின் உடலில் இருந்த கம்பிகளை அகற்றுவது சவாலாக இருந்தது. நெஞ்செலும்பை துளைத்துக்கொண்டு சென்றுள்ளது. நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை லேசாக காயப்படுத்தியிருந்தாலும் முதுகெலும்பை ஒருவழியாக்கியிருந்தது.

அறுவைசிகிச்சை கூடத்தில், இரும்புக் கம்பிகளை அகற்றுவது எலும்பியல்துறை மருத்துவர்களுக்கு மிகக் கடினமாக இருந்தது.

முதுகெலும்பில் பாய்ந்திருந்த கம்பியை அகற்றும்போது கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, அதனை கட்டுப்படுத்தும் பணிகளும் நடந்தன. உடனடியாக சேதமடைந்த உள்ளுறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் சீர் செய்யப்பட்டு, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

ஓரிரு நாள்களில் ஐசியுவுக்கு மாற்றப்பட்டு, விரைவாக நலமடைந்ததால் மருத்துவர்களே ஆச்சரியப்பட்டனர். அவருக்கு எந்த சிக்கலும் ஏற்படாமல், காயங்கள் உடனடியாக குணமடைந்ததால், அவர் விரைவாக வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com