இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு கனடா தூதரக அதிகாரிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நேரில் ஆஜராக மத்திய வெளியுறவுத் துறை சம்மன் வழங்கியிருந்தது.
இதையும் படிக்க | காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை: இந்தியா - கனடா உறவில் விரிசல்
இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் இன்று காலை ஆஜரான கேமரூனை 5 நாள்களுக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.