செப்டம்பர் மாதம் நிலுவையில் உள்ள 7 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
கடந்த செப். 18 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில்கூட தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் தங்களிடம் போதிய நீர் இருப்பு இல்லை என்று கூறி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை செயல்படுத்தக் கூறியது. தற்போது குறைந்த அளவு நீரையே கர்நாடகம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று (செப். 26) காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தரப்பில், 'ஜூன் முதல் செப்டம்பர் வரை 123.14 டிஎம்சி நீர் திறக்கப்பட வேண்டிய நிலையில் 40 டிஎம்சி மட்டுமே தமிழ்நாட்டுக்கு தரப்பட்டது. செப்டம்பர் மாதம் நிலுவையில் உள்ள 7 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். அக்டோபர் மாதத்திற்கான 20.22 டிஎம்சி நீரை காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு திறந்துவிட வேண்டும்' என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணிக்குப் பாதிப்பு?