மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் உதம்பூரில் மும்முனைப் போட்டி நிலவி வருவதன் பின்னணியில் மக்களின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
உதம்பூர் தொகுதியில் களத்தில் 12 வேட்பாளர்கள் இருந்தாலும், உண்மையான போட்டி பாஜக வேட்பாளருக்கும் காங்கிரசுக்கும் இடையேதான் நிகழ்ந்து வருவதாக வியூகங்கள் தெரிவிக்கின்றன.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள சௌத்ரி லால் சிங்கை காங்கிரஸ் களமிறக்கியுள்ள நிலையில், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங் மூன்றாவது முறையாக உதம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகிறார்.
முன்னாள் அமைச்சர் ஜி.எம்.சரூரி தனது ஜனநாயக ஆசாத் கட்சியின்(டிபிஏபி) வேட்பாளராகக் களமிறங்கியது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
கடந்த 2019 ஜிதேந்திர சிங் உதம்பூர் மக்களவைத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். முன்னாள் மகாராஜா ஹரி சிங்கின் பேரனான காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை 3,53,272 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். லால் சிங் வெறும் 19,049 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.
அதேபோன்று 2014 மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தை, ஜிதேந்திர சிங் 60,976 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பின்னர், மோடி அரசில் பிரதமர் அலுவலகத்தில் இணை அமைச்சராகப் பதவியேற்றார் ஜிதேந்திர சிங்.
அப்போது, லால் சிங் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் உதம்பூர் தொகுதியில் இரண்டு முறை வெற்றிவாகை சூடினார். மேலும் மூன்று முறை முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்தார்.
லால் சிங் 2014இல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறினார் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் முந்தைய பிடிபி-பாஜக அரசில் அமைச்சராகவும் இருந்தார்.
மேலும் கதுவாவில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் பங்கேற்றதால் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, 2018ல் லால் சிங் பாஜகவிலிருந்து ராஜிநாமா செய்தார்.
லால் சிங் தனது மனைவி நடத்தும் கல்வி அறக்கட்டளைக்கு எதிரான பணமோசடி வழக்குத் தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் 7ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் மூன்று வாரங்களுக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தல்: உதம்பூரில் மும்முனைப் போட்டி!
குலாம் நபி ஆசாத் தலைமையிலான டிபிஎபியின் துணைத் தலைவராக சரூரி 2004 மற்றும் 2014-க்கும் இடையில் மூன்று முறை கிஷ்த்வாரில் உள்ள இந்தர்வால் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் ஆவார்.
அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கு முன்பு, கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். ஆனால், 2022ஆம் ஆண்டு ஆசாத்திடம் கட்சியின் தலைமையை விட்டுவிட்டு தேசியக் கட்சியுடனான ஐம்பது ஆண்டுக் கால தொடர்பை முடித்துக் கொண்டு வெளியேறினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிஷ்த்வார், தோடா, ரம்பன், உதம்பூர் மற்றும் கதுவா ஆகிய ஐந்து மாவட்ட தொகுதிகளில் வாக்களிக்க மொத்தம் 2,637 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்காளர்களில் 8,45,283 ஆண்கள், 7,77,899 பெண்கள், 13 திருநங்கைகள், 23,637 மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட 25,632 வாக்காளர்கள் என மொத்தம் 16,23,195 வாக்காளர்கள் இந்த தொகுதியில் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.