பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட நாக்பூர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷோமா கே. சென்னுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிணை அளித்து உத்தரவிட்டுள்ளது.
62 வயதான ஷோமாவின் வயது மூப்பு மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், நீதிமன்ற அனுமதியின்றி மகாராஷ்டிர மாநிலத்தை விட்டு வெளியே செல்லாதிருக்குமாறும் அவரது இருப்பிடத்தை அலைபேசி வழியாக விசாரணை அதிகாரிக்கு பகிருமாறும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேசிய புலனாய்வு முகமையிடம் ஷோமா, அவரது கடவுச்சீட்டு, இருப்பிடம் குறித்த தகவல்கள், அலைபேசி எண் ஆகியவற்றை தெரிவிக்குமாறும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென் விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்த மனுவில் பதிலளிக்குமாறு புலனாய்வு முகமையிடம் நீதிமன்றம் கேட்டது.
ஜுன் 2018 முதல் சிறையில் உள்ள சென், பாம்பே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். முன்னதாக பாம்பே உயர்நீதிமன்றம் அவரது பிணையை மறுத்ததோடு அதற்கான அனுமதிக்கு சிறப்பு புலனாய்வு முகமை நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்குரைஞரும் செயல்பாட்டாளருமான சுதா பரத்வாஜ் டிசம்பர் 2021-ல் இயல்பு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதே வேளையில் சென் உள்ளிட்ட எட்டு பேரின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.