புது தில்லி: மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தொண்டர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியிருக்கிறது.
புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையில், ஒருமுறை நிவாரண நடவடிக்கையான மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மார்ச் 15 2024ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தள்ளுபடிக்கான இழப்பீடு தொகை வங்கிகளுக்குமத்திய அரசால் வழங்கப்படும்.
மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்றதும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
பாஜக கொண்டு வந்த தேர்தல் பத்திர விவகாரம் குறித்து விசாரிக்கப்படும்.
உணவு, உடை, காதல் , திருமணம் ஆகியவற்றில் ஒருபோதும் மத்திய அரசு தலையிடாது. இந்தியாவின் எந்தப் பகுதியில் பயணிப்பதற்கும் வசிப்பதற்கம் அனைவருக்கும் உரிமை உள்ளது.
தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற வகையில் தலையிடும் உரிமையை கொடுக்கும் அனைத்து சட்டங்களும் ரத்து செய்யப்படும்.
பணியில் இருக்கும்போது தூய்மைப் பணியாளர் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.