மோசடியாளர்கள், ஹேக்கர்கள் போன்றவர்கள் வங்கி அல்லது அதிகாரப்பூர்வ சேவை மையங்களின் குறுந்தகவல்களை போன்று மக்களுக்கு அனுப்பி மோசடி செய்வதிலிருந்து தப்பிக்க, போலி குறுந்தகவல்களை அடையாளம் காண்பது அவசியம்.
இது பொதுவாக மெத்த படித்த, மோசடியாளர்கள் பற்றிய தகவல்களையும் செய்திகளையும் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கே சற்று சிரமமான வேலைதான். ஆனால், படிக்காத, வயதான நபர்களால், அவ்வளவு எளிதாக அவற்றை அடையாளம் காண முடியாது. எனவேதான், மோசடியாளர்களின் முக்கிய இலக்காக முதியவர்கள் இருக்கிறார்.
இந்த வகையில், போலியான குறுந்தகவல்கள் எப்படி இருக்கும், அவற்றில் எதையெல்லாம் நாம் கவனிக்க வேண்டும் என்பது குறித்து புகைப்படத்துடன் தில்லி காவல்துறை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்தி பகிர்ந்துள்ளது.
ஒருவேளை, அந்த மோசடி மின்னஞ்சல்கள் அல்லது குறுந்தகவல்களை ஒருவர் திறந்தாலோ அல்லது அதற்கு பதிலளித்தாலோ, நிச்சயம் அது அவர்களது வங்கிக் கணக்கைப் பதம்பார்த்துவிடும்.
அவ்வாறு மோசடியாக வரும் தகவல்களில் ஒரு சில இணையதள லிங்குகளும் இருக்கும். தவறுதலாக அவற்றை நாம் கிளிக் செய்துவிட்டால், நமது செல்போன் மூலம், வங்கிக் கணக்கு விவரங்கள் பாஸ்வோர்டு என அனைத்தும் மோசடிக் கும்பலுக்கு சென்றுவிடும்.
சில முறைகளில், செல்போனே ஹேக் செய்யப்பட்டு, செல்போனுக்கு வரும் ஓடிபி உள்ளிட்டவை நேரடியாக மோசடியாளர்களுக்கேக் கிடைக்கக் கூட வழி ஏற்பட்டுவிடும்.
உங்களக்குத் தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகள், உண்மையிலேயே வங்கியிலிருந்துதான் வருகிறதா என்பதையும் மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்கள் வழக்கமான முகவரியிலிருந்துதான் வருகிறதா என்பதையும் ஆராய வேண்டும். வங்கிப் பெயர் போலவே இருக்கும். ஆனால், ஒரு எழுத்து மட்டும் மாறியிருக்கும். எனவே, ஒரு மின்னஞ்சலை திறக்கும் முன் மிகச் சரியாக ஆராய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.