மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் பஸ்தர் கிராமத்தில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல்காந்தி உரையாற்றினார். வரவிருக்கும் மககளவைத் தேர்தல் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க முயல்பவர்கள், அதை அழிக்க நினைப்பவர்கள் என இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் என்றார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பழங்குடியினராக இருப்பதால் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்கப்பட்டார். இது பாஜகவின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்று மோடியை அவர் தாக்கி பேசினார்.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பஸ்தார் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கவாசி லக்மாவை ஆதரித்து இந்தப் பேரணி நடைபெற்றது.
ஆதிவாசி என்ற வார்த்தையை மாற்ற மோடி முயன்று வருகிறார். நாங்கள் உங்களை (பழங்குடியினர்) ஆதிவாசிகள் என்கிறோம், ஆனால் அவர்கள் 'வனவாசி' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். வனவாசி மற்றும் ஆதிவாசி சொற்களுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம். 30 லட்சம் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடத்தப்படும். இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சிகள் தொடங்குவோம் என்று அவர் கூறினார்.
சத்தீஸ்கரில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.