கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில் ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த மாதிரி வாக்குப்பதிவில் பாஜகவுக்கு தாமரை சின்னத்தில் ஒரு முறை அழுத்தினால் இரண்டு வாக்குகள் விழுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், தேர்தல் நடைமுறையில் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மக்களவைத் தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு, 17ஆம் தேதி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அப்போது, பாஜகவுக்கு சாதகமாக வாக்குகள் பதிவானதாக இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களின் முகவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில்தான், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை, ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி, அதனை ஒப்பிட்டுப் பார்ப்பதை கட்டாயமாக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், கேரள ஊடகங்களில் வெளியான இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்தியை மேற்கோள்காட்டியிருந்தார்.
உடனடியாக, இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும்படி, தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர்.
இது தேர்தல் நடைமுறை. இதில் நிச்சயம் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லையே என யாருமே கருதக்கூடாது என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார்.