திகார் சிறையில் உள்ள தில்லி முதல்வர் கேஜரிவால் மெல்ல மரணத்தை நோக்கி தள்ளப்படுவற்கான சூழ்ச்சி நடைபெறுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கேஜரிவால் அதற்கான மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதுதொடர்பாக அவரது குடும்ப மருத்துவரிடம் காணொளி வாயிலாகப் பேசி இன்சுலின் தேவை குறித்துக் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் பேசினார். திகார் சிறைக்குள்ளேயே வைத்து கேஜரிவால் மெல்ல மரணமடைவதற்கான சூழ்ச்சி நடைபெறுகிறது. இதை நான் முழுப் பொறுப்புடன் கூற விரும்புகிறேன்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கேஜரிவாலுக்கு இன்சுலின் வழங்க மறுக்கிறது. கேஜரிவால் சிறைக்கு வெளியே வருவதற்குள் அவரது பல உறுப்புகளுக்கு சேதம் விளைவிப்பதற்கான அனைத்து சதித்திட்டமும் சிறையில் நிகழ்வதாக பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.