மத்தியப் பிரதேச மாநிலம் பீடல் பகுதியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட மூத்த தலைவர் கமல்நாத், கூட்டத்தில் இருந்தவர்களையும் சேர்ந்து முழக்கமிடச் சொன்ன விடியோ வைரலாகியிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம், கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் இருவரும் திடீரென தில்லி சென்ற நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கமல் நாத் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் பரவின.
இதற்கிடையே, ஜெய் ஸ்ரீ ராம் என கொடியை அவர் தனது வீட்டின் மேல் பறக்கவிட்டிருந்ததும் பெசுபொருளானதைத் தொடர்ந்து அது அகற்றப்பட்டது. அதன்பிறகுதான், நானோ மகனோ பாஜகவில் இணையப்போவதில்லை என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஹரி வல்லப் சுக்லா தனது ஆதரவாளர்களுடன் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
காங்கிரஸ் கட்சிக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த போதும், பிரதமர் நரேந்திர மோடியின்பால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்ததாக சுக்லா விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான், மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்தின் கோட்டையான சிந்த்வாரா உள்பட 6 தொகுதிகளில் வெள்ளிகிழமை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தொகுதியில் நகுல் நாத் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.