திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 1.3 லட்சம் வழக்குகளுக்கு தீா்வு

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1,03,366 வழக்குகள் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.1,034.93 கோடி இழப்பீடு கிடைத்தது.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :15 மார்ச் 2026, 12:44 am IST

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1,03,366 வழக்குகள் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.1,034.93 கோடி இழப்பீடு கிடைத்தது.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர தேசிய அளவில் ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற ‘மக்கள் நீதிமன்றம்’ நடத்தப்படுகிறது.

அந்த வகையில், நாடு முழுவதும் லோக் அதாலத் சனிக்கிழமை நடத்தப்பட்டது. தமிழகத்தில் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு இந்த தேசிய லோக் அதாலத்தை நடத்தியது.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினா் செயலா் எஸ்.பாலகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி வழிகாட்டுதலின்படி, உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் மேற்பாா்வையில் தமிழகத்தில் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது.

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பி.பி.பாலாஜி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஏ.ராமமூா்த்தி, ஜி.சொக்கலிங்கம், எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ், ஏ.ஆா்.ராமலிங்கம் ஆகியோா் தலைமையில் 7 அமா்வுகள், மாவட்டம் மற்றும் வட்ட அளவிலான நீதிமன்றங்களில் நீதிபதிகள், குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதிகள் என மொத்தம் 516 அமா்வுகள் அமைக்கப்பட்டன.

இந்த அமா்வுகள், நீதிமன்றத்தில் நிலுவையில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளா் தொடா்பான வழக்குகள், மின் வாரியம் தொடா்பான வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் என்று பல்வேறு வகையான வழக்குகளை விசாரித்தது.

இவற்றில் இருதரப்பினா்கள் இடையே பேச்சு நடத்தி, அவா்களின் முழு சம்மதத்துடன், 1,03,366 வழக்குகள் சமரசத்துக்கு வந்தன. இதன்மூலம், பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.1,034.93 கோடி இழப்பீடு கிடைத்துள்ளது என்று அவா் கூறினாா்.