நாடு முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப். 19 ஆம் தேதி நடைபெற்றது. அந்த நேரத்தில் வெப்ப அலை வாட்டி வதைத்தது.
இந்த நிலையில், 2-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, அதிக வெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் தேர்தல் ஆணையம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தேர்தல் கால வானிலை முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள், இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர், 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளில் பெரிய அளவில் வெப்ப அலை நிலவாது என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தார்.
மேலும், அதிக வெப்ப அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய சுகாரத்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
2-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 12 மாநிலங்களில் வரும் ஏப். 26 ஆம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.