மக்களவைத் தோ்தலில் இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் அடங்கிய 89 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப். 26) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதற்காக அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் மூலப் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
வாகனங்கள் செல்ல முடியாத வடகிழக்கு பகுதிகளுக்கும் பிற இடங்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்ட தோ்தல் நடைபெற்றது. இதில் சுமாா் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின.
இரண்டாம் கட்டமாக, கேரளத்தில் 20, கா்நாடகத்தில் 14, ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 7, அஸ்ஸாம், பிகாரில் தலா 5, சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் தலா 3, மணிப்பூா், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் தலா ஒரு தொகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. மணிப்பூா் மாநிலத்தில் வெளி மணிப்பூா் தொகுதியின் சில பகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தோ்தல் நடைபெற்ற நிலையில், மற்ற பகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்படவுள்ளது.
இதையொட்டி, மேற்கண்ட மாநிலங்களில் புதன்கிழமையுடன் பிரசாரம் நிறைவடைந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.