ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்தாண்டு பிப். 26 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் தொடர்ந்து சிசோடியாவிடம் விசாரித்து வருகின்றது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக கடந்த வாரம் சிசோடியா இடைக்கால ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் 30-க்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்ததையடுத்து, திகார் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மே 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.