மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும் முன்பே பல வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் வரத் தொடங்கிவிட்டதையும் காண முடிந்தது. வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டைச் சோதிக்க வாக்குச் சாவடிகளில் மாதிரி வாக்குப் பதிவும் நடைபெற்றது.
கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அஸ்ஸாம், பிகாரில் தலா 5, சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் தலா 3, மணிப்பூா், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.