‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

வாட்ஸ்ஆப் இந்திய சந்தையை விட்டு வெளியேறும்? நீதிமன்றம் பதில்!
‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி தனியுரிமையை மீறக் கோருவது இந்தியாவில் அதனை இல்லாமலாக்கும் என தில்லி உயர்நீதிமன்றத்தில் மெட்டா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான ஆரம்பம் முதல் இறுதி வரையிலான (எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன்) பாதுகாப்பு மற்றும் பயனர் தனியுரிமை கொள்கையை உடைக்க முடியாது என வாட்ஸ் ஆப் வாதிட்டுள்ளது.

மெட்டா குழுமத்தின் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப் இந்தியாவில் மிகப்பெரும் சந்தையைக் கொண்டுள்ளது. நாட்டில் 90 கோடி பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ் ஆப் மற்றும் மெட்டா நாட்டின் புதிய சட்டத்திற்கு எதிராக தொடுத்துள்ள வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

புதிய சட்டத்தின்படி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் குறுஞ்செய்திகளை உருவாக்குபவர் யார் என்பதை நீதிமன்ற ஆணையின்பேரில் நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும். இது தங்களின் பயனர் தனியுரிமையை மீறுவதாக வாட்ஸ்ஆப் வாதிடுகிறது.

இதுகுறித்து, “ ஒரு இயங்குதளமாக, நாங்கள் தெரிவிப்பது இந்த குறியாக்கத்தை (என்க்ரிப்ஷன்) உடைத்தால் வாட்ஸ்ஆப் (இங்கிருந்து) சென்றுவிடும்” என மெட்டா வழக்குரைஞர் தேஜஸ் கரியா தெரிவித்துள்ளார்.

பயனர்களின் தனியுரிமை பிரதானமானது எனவும் குறியாக்க முறை ஆரம்பம் முதல் இறுதி வரையிலான செய்திகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

வழக்கின் சிக்கல்தன்மையைக் கருத்திகொண்ட நீதிமன்றம், தனியுரிமை என்பது முழுமையானது கிடையாது எனவும் ஏதாவது வகையில் இதனை சமன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com