ஜார்கண்ட மாநிலம் காண்டே சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அம்மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் வருகின்ற மே 20-ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுடன், மாநிலத்தில் காலியாக உள்ள காண்டே சட்டப்பேரவைக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கல்பனா சோரன் இன்று தாக்கல் செய்தார். அவருடன் மாநில முதல்வர் சம்பாய் சோரனும் உடனிருந்தார்.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், கல்பனா முதல்வராவார் என்று கூறப்பட்ட நிலையில் சாம்பாய் சோரன் பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து, தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிய கல்பனா சோரன் பல்வேறு அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.