
மேப்பாடி: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், சூரல்மலை பகுதியே புரட்டிப்போட்டப்பட்ட நிலச்சரிவில், பிறந்து 40 நாள்களே ஆன குழந்தையும் அதன் 6 வயது சகோதரனும் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
பொட்டம்மல் வீட்டில் இருந்து இரண்டு குழந்தைகள் உயிரோடு மீட்கப்பட்டிருப்பது, கடந்த நான்கு நாள்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மீட்புப் படை வீரர்களுக்கு சற்று ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முகமது ஹயான் என்ற 6 வயது சிறுவனும், அவனது 40 நாள்கள் ஆன தங்கை அனாராவும் இப்படியொரு பயங்கர நிலச்சரிவில் உயிரோடு பிழைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. இவர்கள் வீடு நிலச்சரிவில் சிக்கி, இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அடித்துச் சென்றிருக்கிறது. நிலச்சரிவு நேரிட்ட போது, வீட்டுக்குள் குழந்தைகளின் தாய் தன்ஸீரா, பாட்டி அமினா, கொள்ளுப்பட்டி பத்தும்மா உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் சேற்று மணலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இந்த பிஞ்சுக் குழந்தைகளை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
நிலச்சரிவு வருவதை அறிந்து, குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த தன்ஸீரா, தனது கையில் அனராவை ஏந்திக்கொண்டு சிறுவனுடன், வீட்டின் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார். வீடு புரட்டிப்போட்டபோது, சிறுவன் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டான். கையிலிருந்த குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. ஆனால், எப்படியோ குழந்தையின் கையை மட்டும் பிடித்துக்கொண்டுள்ளார் தன்ஸீரா. இதனால், குழந்தையின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் படையினர் வந்து தன்ஸீராவையும் அவரது 40 நாள் குழந்தையையும் மீட்டனர். இதற்கிடையே, அவர்களது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கியபடி இருந்த சிறுவன் ஹயானும் பத்திரமாக மீட்கப்பட்டார். தனது பிள்ளைகள் மீட்கப்பட்டாலும், தாயும், பாட்டியும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருக்கிறார் தன்ஸீரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.