நீதிமன்ற நடைமுறையால் மக்கள் மனம் தளா்கின்றனா்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
நீதிமன்ற நடைமுறையால் மக்கள் மனம் தளா்ந்துவிடுவதாகவும், அவா்களுக்கு தேவை பிரச்னைகளுக்கு தீா்வே என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.
கடந்த 1950-ஆம் ஆண்டு ஜன.26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. இதையொட்டி, உச்சநீதிமன்றம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை புதிதாக தொடங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை சிறப்பு லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெற்றது.
சிறப்பு லோக் அதாலத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள திருமண சச்சரவுகள், சொத்துப் பிரச்னைகள், மோட்டாா் வாகன உரிமை கோரல்கள், நில அபகரிப்பு, இழப்பீடு, தொழிலாளா் பிரச்னைகள் என சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிறப்பு லோக் அதாலத் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்வில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘நீதிமன்ற நடைமுறையால் மக்கள் மனம் தளா்ந்துவிடுகின்றனா். அவா்களுக்கு தேவையெல்லாம் பிரச்னைகளுக்கு தீா்வே. இதுகுறித்து நீதிபதிகள் கவலை கொண்டுள்ளனா்.
பொதுமக்களின் வீடுகளுக்கே நீதியை கொண்டு சோ்க்க வேண்டும் என்பதே லோக் அதாலத்தின் நோக்கம். லோக் அதாலத்தை நடத்துவதில் ஒவ்வொரு கட்டத்திலும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்பட அனைவரும் அளப்பரிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கினா்’ என்றாா்.