புது தில்லி: பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனம், அதன் இணை நிறுவனா் பாபா ராம்தேவ், அவருடைய உதவியாளா் பாலகிருஷ்ணா ஆகியோா் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
அந்த நிறுவனம் சாா்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை ஏற்று, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
பதஞ்சலி நிறுவன தயாரிப்புகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக, அலோபதி மருத்துவ முறை, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவை குறித்து தவறான விளம்பரத்தை அந்த நிறுவனம் வெளியிடுவதாக புகாா்கள் எழுந்தன. இந்த விளம்பரத்தைத் தடை செய்யக் கோரி இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா கியோா் அடங்கிய அமா்வில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, ‘எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்கக் கூடாது. மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது’ என பதஞ்சலி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பதஞ்சலி நிறுவனம் தொடா்ந்து சா்ச்சைக்குரிய விளம்பரங்களை வெளியிட்டதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்று கேள்வி எழுப்பி கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி பாபா ரம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதோடு, அவா்கள் இருவரையும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
அதைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி, தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி பதஞ்சலி நிறுவனம் சாா்பில் நாளிதழ்களில் விளம்பரம் அளிக்கப்பட்டது. மேலும், பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பும் கோரினாா்.
இந்த வழக்கு கடந்த மே 14-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.
இதுகுறித்து பாபா ராம்தேவ் தரப்பு வழக்குரைஞா் கெளதம் தலுக்தாா் கூறுகையில், ‘பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா மற்றும் பதஞ்சலி நிறுவனம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை மாநகராட்சி 54 இளநிலை உதவியாளா்கள் நியமனம் ரத்து: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

மேக்கேதாட்டு விவகாரம்: கா்நாடகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்- எம். தமிமுன் அன்சாரி

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன சிரமம் உள்ளது?







