
நமது சிறப்பு நிருபர்
தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட மங்கை குயிலியின் ஆங்கில குறுங்காவிய மூலத்தின் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பிரஞ்ச் மொழிபெயர்ப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் புதன்கிழமை வெளியிட்டார்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முதல் பெண் போராளியான ராணி வேலு நாச்சியாரின் மகளிர் படைத் தளபதியாக இருந்த குயிலி என்கிற வீர மங்கையின் வரலாற்றுக் கதை "தி பாலட் ஆஃப் த வாரியர் }கேர்ல் குயிலி' என்கிற தலைப்பில் வழக்குரைஞரும் கவிஞருமான வானவில் கே.ரவி ஆங்கிலக் கவிதை வடிவில் எழுதியிருந்தார். இவர் பிரபல செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவியின் கணவராவார்.
சர்வதேசமும் அறியும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில குறுங்காவியத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் முறையே இலந்தை ராமஸ்வாமி, பேராசிரியர் என். லட்சுமி ஐயர், உதவிப்பேராசிரியர் டோடா சேசு பாபு, கே.புகழேந்தி உள்ளிட்டோர் மொழிபெயர்த்திருந்தனர்.
இந்த மொழிபெயர்ப்பு நூல்களை 78 - ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லி குதூப் இன்ஸ்டிடூயூஷனல் ஏரியாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய சம்ஸ்கிருதம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேலு நாச்சியார் மற்றும் குயிலியின் வரலாற்றையும் சிவகங்கை மண்ணின் கலாசார சரித்திரத்தையும் வட இந்திய வாசகர்களுக்கு ஹிந்தியில் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழக ஹிந்தி பேராசிரியர் லட்சுமி ஐயர், வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோரின் வீர வசனங்களையும் ஹிந்தியில் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.