தில்லியில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்று அங்கு வியாபாரிகளின் குறைகளைக் கேட்டறிந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'ஒற்றுமை நடைப்பயணம்' மேற்கொண்டார்.
இதையடுத்து அவர் செல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்துப் பேசி வருகிறார். அதேபோல பல்வேறு தொழில் சார்ந்தவர்களையும் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
அந்தவகையில் தில்லியில் மளிகைக் கடைக்குச் சென்று வியாபாரிகளுடன் உரையாடியுள்ளார். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன் மளிகைக் கடைக்கு வரும் மக்களுக்கு பொருள்களை எடுத்துக்கொடுத்து வியாபாரமும் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'சமீபத்தில் தில்லியில் உள்ள ஒரு மளிகைக் கடைக்குச் சென்றேன். மளிகைக் கடைகள் என்பது பொருள்களை விற்கும் இடம் மட்டுமல்ல. மளிகைக் கடைக்காரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்ச்சிரீதியாகவும் கலாசாரரீதியாகவும் தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால், வணிகத்தின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் மூடப்படுகின்றன. இது கவலைக்குரியது.
தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் அதேநேரத்தில் அதனால் கடுமையாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்கும்படியான ஒரு சமநிலையைக் கண்டறிய வேண்டும்.
நமது பொருளாதாரம் மாறும்போதும், உலகப்போக்குகளுக்கு ஏற்ப நாம் முன்னேறும்போதும், சிறு வணிகங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.
நீங்கள் இதுபோன்று எங்களுடன் ஏதேனும் பகிர்ந்துகொள்ள விரும்பினால் அனுப்பவும்' என்று பதிவிட்டுள்ளார்.
இத்துடன் மளிகைக் கடைக்குச் சென்று அங்குள்ளவர்களுடன் உரையாடிய விடியோவையும் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.