நதிகளை சுத்தம் செய்யத் தயாரா? முதலீடு செய்யத் தயார்! ஆனந்த் மஹிந்திரா பதிவு!
ஆற்றை சுத்தம் செய்ய தனியங்கி இயந்திரங்களை நாம் கண்டறிய வேண்டும் என்றும், அப்படி செய்யும் புத்தாக்க (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய தயாராக இருப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களைக் கண்டறிய வேண்டும் என்றும் அதில் முதலீடு செய்யத் தயாராகவுள்ளதாகவும் ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தார்.
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவ்வபோது அவர் வெளியிடும் பதிவுகள் பலரின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கக்கூடியதாகவும் இருந்துள்ளது.
அந்தவகையில் சமீபத்தில் நதிகளை சுத்தம் செய்யும் சீனாவைச் சேர்ந்த தானியங்கி இயந்திரத்தின் விடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நதிகளை சுத்தம் செய்யும் தானியங்கி இயந்திரம் இது. பார்ப்பதற்கு சீனாவைச் சேர்ந்தது போன்று உள்ளதல்லவா?
இதுபோன்ற தானியங்கி இயந்திரங்களை நாம் இப்போதே உருவாக்க வேண்டும். ஏதேனும் புத்தாக்க நிறுவனங்கள் இதனை செய்ய முன்வந்தால், முதலீடு செய்யத் தயாராக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.