கோழிக்கோடு: மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகி கேரளாவில் பங்கேற்ற இளைஞர்கள் மாநாட்டில் ‘பாரத் மாதா கி ஜே’ முழக்கமிட மறுத்த கூட்டத்தினரிடம் கோபமாக பேசியதும் ஒரு பெண்ணை வெளியேற சொன்னதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சரான மீனாக்ஷி லேகி, கேரளாவின் சில வலதுசாரி அமைப்புகள் ஒருங்கிணைத்த இளைஞர் மாநாட்டில் பேசச் சென்றார். பேசி முடிக்கும்போது பார்வையாளர்களை நோக்கி அவரைப் பின்தொடர்ந்து பாரத் மாதா கி ஜே முழக்கமிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பார்வையாளர்களிடமிருந்து திருப்திகரமாக முழக்கம் எழாததால் கோபமான மீனாக்ஷி கடைசி வரை முழக்கமிட மறுத்த பெண்ணை மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேற சொன்னது சர்ச்சையாகியுள்ளது.
“பாரதம் உங்கள் தாய் அல்லவா? அதில் எதுவும் சந்தேகம் உள்ளதா?” எனக் கேட்டவர் குறிப்பிட்டு ஒரு பெண்ணை மட்டும் எழுப்பி, “பாரதம் உன் தாய் அல்லவா? ஏன் இந்த அணுகுமுறை” என கடிந்ததோடு அங்கிருந்து வெளியேற அறிவுறித்தினார்.
நாட்டைக் குறித்து பெருமிதப்படாதவர்களும் இந்தியா பற்றி பேசுவதை விரும்பதாவர்களும் மாநாட்டில் இருக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இதையும் படிக்க: ரயில்வே தோ்வு அட்டவணை வெளியீடு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்கள் கூச்சப்படுகிறார்கள், நாம் தான் அவர்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என பதிலளித்தார்.