இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் ஒரு பக்கம் கையில் பணம் வைத்திருக்க வேண்டாம், ஆபத்தில்லை என்பதை முன்னெடுத்து விளம்பரப்படுத்தப்பட்டாலும்கூட, அதற்கு இணையாக சைபர் குற்றங்கள் மக்களின் சொற்ப வருமானத்தைப் பிடுங்கித் தின்றுகொண்டிருக்கின்றன.
சிலரது வாழ்நாள் சேமிப்பு, சிலரது ஒருமாத ஊதியம் என எதையும் விட்டுவைப்பதில்லை இந்த சைபர் மோசடியில் ஈடுபடுவோர்.
நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. 2020ஆம் ஆண்டு 50,035 ஆக இருந்தது, 20222ஆம் ஆண்டு 65,893 ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் வெளியான தேசிய குற்றப்பதிவியல் காப்பகம் வெளியிட்ட தகவலில், நாட்டிலேயே தெலங்கானாவிலும் கர்நாடகத்திலும் அதிக சைபர் குற்றங்கள் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் முறையே 15,297 மற்றும் 12,556 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இன்னமும் பதிவாகாத குற்றங்கள் எவ்வளவு இருக்கும் என்பது மோசடியாளர்களுக்கே வெளிச்சம்.
இதையடுத்து, மத்திய உள்துஐற அமைச்சகம் ஏழு சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்கி, அதிக மோசடிகள் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு சிறப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுளள்து.
அதிக மோசடிகள் நடக்கும் இடங்களில் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மோசடியாளர்களிடமிருந்து மக்களைத் தப்புவிக்க வழி ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதுவரை மக்களிடமிருந்து வந்த 4.7 லட்சம் புகார்களில் நடவடிக்கைகள் மூலம் சுமார் 1,200 கோடி மக்கள் பணம் மீட்கப்பட்டுள்ளது. 1930 என்ற தொலைபேசி எண் மூலம் மக்கள் உடனடியாக சைபர் குற்றங்கள் குறித்துதகவல் அளித்துப் பயன்பெறலாம் எனவும், இதுவரை 3.2 லட்சம் சிம் கார்டுகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.