பாட்னா: சத்தீஸ்கரில் உள்ள மருத்துவமனையில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், 18 மணி நேரத்துக்குப் பிறகு பிகாரில் உயிர்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கரில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர், தனது சொந்த மாநிலமான பிகாருக்குள் நுழைந்ததும் உயிர்பெற்றுள்ளார்.
பிகார் மாநிலம் பெகிசாரை என்ற மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ராம்வதி தேவி (71) தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் பிப்ரவரி 11ஆம் தேதி நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் ராம்வதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மறுநாள் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
அவரது இறுதிச் சடங்குகள் குறித்து யோசித்த மகன்கள், அவரது சொந்த ஊரான பிகாருக்குக் கொண்டு செல்வதாக முடிவெடுத்தனர். தனியார் வாகனத்தை எடுத்துக் கொண்டு 18 மணி நேரம் பயணித்து பிகார் சென்றனர். அப்போது தாயின் உடலில் அசைவுகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக பிகாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்ததில் அவர் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், மாரடைப்பு காரணமாக அப்பெண் மரணமடைந்திருக்கலாம். வாகனத்தில் கொண்டு வரும்போது அது சிபிஆர் கருவி போல செயல்பட்டு, உயிர்பிழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.