புது தில்லி: தில்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருப்பதாக புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திடீரென அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலைபேசி வருவதாகக் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தில்லியில் தனது ஆட்சியைக் கவிழ்க்க பாஜக, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் ரூ.25 கோடி தருவதாக பேரம் பேசி வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், தில்லி பேரவையில் திடீரென நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதற்கு குறிப்பிட்ட எந்தக் காரணத்தையும் அரவிந்த் கேஜரிவால் அறிவிக்கவில்லை.
மேலும், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இது குறித்து ஹிந்தியில் குறிப்பிட்டிருக்கும் அரவிந்த் கேஜரிவால், இன்று தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருப்பதாகவும் நாளை இதன் மீது விவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 14ஆம் தேதி தில்லி கலால் கொள்கையில் மோசடி நடைபெற்றதாகக் கூறி, பிப்ரவரி 19ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை, அரவிந்த் கேஜரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இது அமலாக்கத் துறை அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுப்பிய 6வது சம்மன் என்பது குறிப்பிடத்தக்கது.