ரஷிய ராணுவத்தில் உதவியாளர்களாக இருக்கும் இந்தியர்கள் வெளியேற உதவி கேட்கப்படுவதாக வெளியான செய்திக்கு மத்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் படையெடுத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து இரு தரப்பினரும் மாறிமாறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இரு நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ரஷிய ராணுவத்தில் உதவியாளர்களாக இருக்கும் இந்தியர்கள் தவித்து வருவதாகவும், நாட்டைவிட்டு வெளியேற உதவி கேட்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “ரஷிய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் வெளியேற உதவி கோருவதாக சில தவறான செய்திகள் ஊடகங்களில் பரவி வருகின்றன.
மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடிய அனைவரையும் ரஷிய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள ரஷிய தூதரகத்தின் மூலம் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக பல இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்று உதவி கேட்கும் பட்சத்தில் ரஷிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முன்னுரிமை அடிப்படையில் இந்தியர்களை மீட்க உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், ரஷிய ராணுவத்தில் உதவியாளா்களாக பணியாற்றி வரும் இந்தியா்களை விரைந்து விடுவிக்குமாறு ரஷியாவிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருவதாகவும், உக்ரைன் போா் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு அனைத்து இந்தியப் பணியாளா்களையும் கேட்டுக்கொள்வதாக ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.