உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை(இன்று பிப்.27) நடைபெறுகிறது. இதையொட்டி உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான சமாஜவாதி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவிலிருந்து 8 வேட்பாளர்களும், சமாஜவாதி கட்சி சார்பில் 3 பேர் என மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் பாஜக தரப்பு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், மொத்தமுள்ள 10 மாநிலங்களவை இடங்களில் 7-இல் பாஜக வேட்பாளர்கள் வெல்வது உறுதியாகிவிட்டது. அதேபோல, சமாஜவாதி கட்சி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், 3 இடங்களை அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், சமாஜவாதியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சிலர், கட்சி மாறி வாக்களிக்கக் கூடும் என்ற அச்சமும் அக்கட்சித் தலைமையிடம் நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 8 இடங்களில் பாஜக வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் நிலவுகிறது.