வடமாநிலங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கடுமையான குளிர் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக அதிக பனிப்பொழிவு, குளிர் நீடித்து வருகின்றது. இந்த நிலையில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மேலும் இரண்டு நாள்களுக்கு அதிகப்படியான குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த 3 நாள்களுக்கு வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சமவெளிகளின் சில பகுதிகளில் அடர்த்தியானது முதல் மிக அடர்த்தியான பனிமூட்டம் தொடரும் என கணித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று(01.01.24) வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 3,4 நாள்களுக்கு தமிழகம், தென் கேரளம், லட்சத்தீவுகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
அதேசமயம், ஜன 5 வரை பஞ்சாபின் சில பகுதிகளில் இரவு மற்றும் காலை நேரங்களில் அடர்த்தியான மற்றும் மிகவும் அடர்த்தியான பனியும், ஜன.3 வரை ஹரியாணா, சன்டீகரில் சில பகுதிகளில் பனி நிலவும். மேலும், ஹிமாசலில் சனிக்கிழமை வரையிலும், உ.பி.யில் வியாழன் வரையிலும், ம.பி.யில் செவ்வாய் வரையிலும், பிகார், கங்கை மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய இடங்களிலும் அதிகாலை அடர்ந்த மூடுபனியும் நிலவும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.