திருமண உறவில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், தனது ஓய்வூதியத்தை கணவருக்குப் பதில் குழந்தைகளுக்கு வழங்குமாறு அரசு பெண் ஊழியா்கள் பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மத்திய குடிமைப் பணிகள் ஓய்வூதிய விதிகள் 2021, விதி 50-இன்கீழ், பணியில் உள்ள அரசு ஊழியா் அல்லது பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியா் இறந்தால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
இறந்த அரசு ஊழியருக்கு கணவா்/மனைவி உயிரோடு இருப்பின் அவா்களுக்கே குடும்ப ஓய்வூதியத்தில் முன்னுரிமை வழங்கப்படும். கணவனோ மனைவியோ இறந்தாலோ அல்லது ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவராக இருந்தால் மட்டுமே குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த விதிகளில் மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத் துறை சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக ஓய்வூதிய நலத் துறையின் செயலா் வி.ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:
திருமண உறவில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தன்னுடைய மறைவுக்குப் பிறகு ஓய்வூதியத்தை கணவருக்குப் பதில் குழந்தைகளுக்கு வழங்குமாறு அரசு பெண் ஊழியா்கள் பரிந்துரைக்கலாம்.
கணவரிடம் விவாகரத்து கோரியிருத்தல், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-இன்கீழ் கணவா் மீது புகாா் அளித்தல் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் புகாா் அளித்தல் உள்ளிட்டவை எதுவாக இருப்பினும் மேற்கண்ட திருத்தங்களில் கூறியுள்ளவாறு அரசு பெண் ஊழியா்கள் கணவருக்குப் பதில் குழந்தைகளுக்கு தனது ஓய்வூதியத்தை வழங்க பரிந்துரைக்கலாம்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் கலந்தாலோசித்த பிறகே இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குடும்ப ஓய்வூதிய வழக்குகளில் பெண்களுக்கு சாதகமான தீா்ப்பை அளிப்பதற்கு வழிவகுத்துள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.