மாயாவதி
மாயாவதி

சமாஜவாதி கட்சியிடம் இருந்து பகுஜன் சமாஜ் அலுவலகத்தை காக்க வேண்டும்: உ.பி. அரசுக்கு மாயாவதி கோரிக்கை

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் அச்சுறுத்தலில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தை பாதுகாக்க உதவ வேண்டும்

லக்னௌ: உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் அச்சுறுத்தலில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தை பாதுகாக்க உதவ வேண்டும் என்று அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சிக்கும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக இரு கட்சிகள் இடையே ஜாதியரீதியாலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக மாயாவதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பகுஜன் சமாஜ் தலைமை அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற உதவ வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். ஏனெனில் கட்சித் தலைமையகத்துக்கு தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. மேலும், தலித் மக்களுக்கு எதிரான தீயசக்திகள் (சமாஜவாதியை குறிப்பிடுகிறாா்) மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 1995-ஆம் ஆண்டும் அந்த தீயசக்திகள் எங்கள் கட்சி அலுவலகத்தின் மீதும், எனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தின. தண்ணீா், மின்சாரம் போன்றவையும் துண்டிக்கப்பட்டன. அதுபோன்ற சம்பவங்கள் இனி மேலும் நடைபெறக் கூடாது’ என்று கூறியுள்ளாா்.

கடந்த 1995-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த மறைந்த முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மாயாவதி திரும்பப் பெற்றாா். அப்போது அவரது கட்சி அலுவலகம், இல்லத்தின் மீது சமாஜவாதி தொண்டா்கள் தாக்குதல் நடத்தினா் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com