கடலோர மாநிலத்தில் 4 வயது மகனைக் கொன்று பையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனரும், ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் இருப்பவர் சுசனா சேத்(39).
இவர் கடந்த ஞாயிறன்று வடக்கு கோவாவில் உள்ள பிரபல அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்துத் தங்கியுள்ளார். திங்களன்று காலை அறையை காலி செய்துவிட்டு பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், அறையைச் சுத்தம் செய்ய சென்ற பராமரிப்பு ஊழியர் அறையில் அங்கங்கு ரத்தக்கறைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உணவக நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சுசனா தனது மகனுடன் அறைக்கு வந்துள்ளார். திரும்பிச்செல்லும் போது தனியாகச் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் சுசனாவை தொடர்புகொண்டு தொலைபேசியில் விசாரித்தனர். கர்நாடகத்தில் சுசனாவை போலீஸார் கைது செய்தனர்.
கணவருடன் பிரிந்ததன் காரணத்தால் மகனைக் கொன்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.