அயோத்தி கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்கும் 11,000-க்கும் அதிகமான முக்கிய பிரபலங்களுக்கு ‘கோயில் மண்’ பரிசாக வழங்கப்படும் என உத்தர பிரதேச மாநில அரசு சனிக்கிழமை தெரிவித்தது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை வரும் 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க சுமாா் 11,000-க்கும் அதிகமான முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயில் அஸ்திவாரம் அமைக்கும்போது தோண்டப்பட்ட கோயில் மண்ணில் சிறிதளவு அவா்களுக்குப் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இது குறித்து மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘மூலவா் சிலை பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கும் முக்கிய பிரபலங்களுக்கு ராம ஜென்மபூமியின் மண், சிறிய பெட்டிகளில் அடைக்கப்பட்டு பரிசாக வழங்கப்படும். இதனுடன், நெய்யால் செய்யப்பட்ட ‘மோத்திச்சூா் லட்டு’ பிரசாதமாக வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடிக்கு 15 மீட்டா் நீளமுள்ள அயோத்தி ராமா் கோயில் படம் பரிசாக வழங்கப்பட உள்ளதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரஅறக்கட்டளை உறுப்பினா் ஒருவா் தெரிவித்தாா்.
பிரதிஷ்டை தின நிகழ்ச்சியையொட்டி கோயில் வளாகத்தில் 7,500 போ் அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மூலவா் சிலை பிராண பிரதிஷ்டையை வாரணாசியைச் சோ்ந்த பூஜாரி நடத்துகிறாா். அறக்கட்டளை உறுப்பினா்கள் 4 போ், 4 பூஜாரிகள் அவருடன் உடனிருப்பாா்கள் என அயோத்தி மண்டல ஆணையா் கெளரவ் தயாள் தெரிவித்துள்ளாா்.