கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தில்லியில் உள்ள ஜன்தர் மந்தர் பகுதியில் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளது. கேரளத்தின் ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி நடத்தும் இந்த போராட்டம் வரும் பிப்ரவரி 8-ல் நடைபெறவுள்ளதாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தெரிவித்துள்ளார்.
கேரளத்திற்கு மத்திய அரசால் ஏற்படும் நிதி புறக்கணிப்புக்கு எதிராக இந்த போராட்டம் குரல் எழுப்புகிறது. 'இந்த போராட்டம், கேரளத்திற்காக மட்டுமல்ல, பாஜக அல்லாத மற்ற மாநிலங்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிக்கு எதிராகவும் குரல் எழுப்பும்' என சிபிஐ(எம்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்ற பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு, இந்த போராட்டத்திற்கு ஆதரவு கோரும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மாநில சுயஆட்சி மற்றும் நிதி கட்டுப்பாடுகள் மீதான மத்திய அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
'பாஜக இந்துத்துவா கொள்கைகளை பரப்ப முயற்சிப்பதையும், மத நம்பிக்கைகளை அரசியலாக்க முயல்வதையும் நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்' என எம்.வி. கோவிந்தன் கூறினார்.