திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசு இல்லத்தை வெள்ளிக்கிமை காலி செய்ததாக அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
எஸ்டேட் இயக்குநரகம் ஒரு குழுவை இன்று அரசு இல்லத்துக்கு அனுப்பி, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. அயோத்தி ராமர் கோயிலில் மோடியின் பங்களிப்பு ஸீரோ: சுப்ரமணியன் சுவாமி
9பி என்ற அரசு இல்லத்தில் மஹுவா மொய்த்ரா வசித்து வந்த நிலையில், இன்று காலை அதிகாரிகள் முன்னிலையில், அவர் அரசு இல்லத்தை காலி செய்ததாகவும், வெளியேற்றம் போன்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றும் வழக்குரைஞர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அரசு இல்லத்தின் பொறுப்புகள் அனைத்தும் அரசு இல்லங்களுக்கான இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் மஹுவா மொய்த்ரா, மக்களவை எம்.பி. பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், அரசு இல்லத்தை காலிசெய்யுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், அரசு இல்லத்தைக் காலி செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிமன்றம், இல்லத்தைக் காலி செய்துகொடுக்குமாறு தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக,
நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி கேட்க, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிக்க.. இனி, ஆன்டிபயாடிக் கொடுப்பது ஏன் என மருத்துவர் விளக்க வேண்டும்
இது தொடா்பான புகாரை விசாரித்த மக்களவை நெறிமுறைகள் குழு, அவை உறுப்பினா் பதவியிலிருந்து மஹுவாவை நீக்குமாறு பரிந்துரைத்தது. இதையடுத்து, மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து கடந்த டிச.8-ஆம் தேதி அவா் நீக்கப்பட்டாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனு, விசாரணையில் உள்ளது.
இதனிடையே அவா் எம்.பி.யாக இருந்தபோது, தில்லியில் பயன்படுத்தி வந்த அரசு இல்லத்தை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் காலிசெய்யுமாறு மத்திய வீட்டுவசதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் எஸ்டேட்ஸ் இயக்குநரகம் கடந்த டிச.11-இல் மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் அரசு இல்லத்தைக் காலி செய்திருக்கிறார்.