புது தில்லி : கடவுள் ராமரின் ஆட்சி, இந்திய அரசமைப்பு இயற்றியவர்களுக்கான உத்வேகமாக இருந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டின் முதல் ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேகம், கோடிக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம், நாட்டின் கூட்டு பலம் என்னெவென்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று கூறினார்.
மேலும், அனைவரது வார்த்தையிலும் ராமர் இருக்கின்றார், அனைவரது மனதிலும் ராமர் உள்ளார் என்று தெரிவித்த பிரதமர் மோடி, ஜனவரி 22-ஆம் தேதி மாலை, நாடெங்கிலும் தீபம் ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டதன் மூலம், நம் சமூகத்தன்மையின் சக்தி வெளிப்பட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த பத்து ஆண்டுகளில், பத்மவிருதுகள் வழங்கும் முறையானது முழுமையாக மாற்றமடைந்திருப்பதாகவும், பத்ம விருதுகளை அளிக்கும் முறையில் பல மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இப்போது இது மக்களின் பத்ம விருதாக மாறிவிட்டது என்று கூறினார்.