ஒடிசாவின் பலசோர் மாவட்டத்தில் மாரடைப்பு ஏற்படப்போவதை உணர்ந்த ஓட்டுநர் சரியான நேரத்தில் பேருந்தை நிறுத்தி 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். ஆனால் பேருந்தை நிறுத்திய சில நொடிகளில், அவர் இறந்துபோன சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு வங்க சுற்றுலாப்பயணிகள் 60 பேரை பஞ்சலிங்கேசுவர் கோயிலுக்கு அழைத்துச் சென்ற அந்த பேருந்தின் ஓட்டுநர் ஷேக் அக்டர், மாரடைப்பு ஏற்படப்போவதை உணர்ந்துள்ளார். நெஞ்சில் சிறிதாக வலி ஏற்படுவதை உணர்ந்ததும் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மயங்கிவிட்டார்.
திடீரென வண்டி நின்றதைப் பார்த்த பேருந்துப் பயணிகளும் அந்தப் பகுதி மக்களும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: தேச விரோத வழக்கில் மேலும் 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
60 பேரின் உயிருக்கு அவர் பொறுப்பு என்பதை உணர்ந்து, உயிரிழக்கும் நேரத்திலும் கவனமாக பேருந்தை நிறுத்தி அவர்களைக் காப்பாற்றிய ஷேக் அக்டரின் செயலை அனைவரும் பாராட்டி வருவதோடு, அவர் இழப்பிற்கு வருத்தம் தெரிவிக்கின்றனர்.