
ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டுமென மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் திங்கள்கிழமை(ஜூலை 1) குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற ரே பரேலி தொகுதி எம்.பி. ராகுல் காந்தி, பாஜக மீது பல்வேறான விமர்சனங்களை அடுக்கினார். அதில் ஒன்றாக `பாஜக இந்துக்கள் அல்ல’ என்று விமர்சித்திருந்தார்.
இன்று மக்களவையில் சுமார் 90 நிமிடங்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அக்னிவீர் திட்டம், பாஜகவின் வெறுப்பு அரசியல், விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பினார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் கருத்துகளை விமர்சித்து பாஜக எம்.பி. நடிகை கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.
கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையில் ராகுல் காந்தி ஜி தெரிவித்துள்ள அனைத்து பொறுப்பற்ற கருத்துகளுக்கு மத்தியில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் ஒரு ராகுல் அல்ல, இருவராக உள்ளேன். அதில் ஒருவர் அரசமைப்புக்காக வாழ்ந்து வருவதாகவும், மற்றொரு ராகுல் மடிந்துவிட்டதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
இது கேளிக்கையான விஷயமல்ல. ராகுல் ஜி உடனடியாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குடும்பத்திலிருந்தும், தாயாரிடமிருந்தும் வரும் அழுத்தங்களால், நீங்கள் யாராக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அதைவிடுத்து வேறொருவராக இருக்க நேரிடுவதால் இதுபோன்ற அடையாளச் சிக்கல்கள் ஒருவருக்கு உண்டாகும். இதனை பெரும்பாலான மனநல ஆலோசகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
ராகுல் ஜியின் பேச்சில் ஏராளமான சிக்கல்களும் வலிகளும் உள்ளன.
மதிப்புக்குரிய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராகுல் ஜி பேசும்போதும், தன்னால் இருவேறு நபர்களைக் காண முடிவதாகத் தெரிவித்துள்ளார். இது போன்ற கருத்துகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
நாடாளுமன்றத்தில் இதுபோன்ற நடத்தைகள் குறித்த மனநலனைப் பற்றி நினைத்துப் பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார் கங்கனா ரணாவத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.