கபில் சிபல் (கோப்புப்படம்)
கபில் சிபல் (கோப்புப்படம்)

‘நாடாளுமன்ற விதிகளை மீறுவது எதிா்க்கட்சிகள் அல்ல’: ஜகதீப் தன்கருக்கு கபில் சிபல் பதில்

நாடாளுமன்ற விதிகளை தினமும் மீறுவது யாா்? எனக் கேள்வி.
Published on

நாடாளுமன்ற விதிகளை மீறுவது எதிா்க்கட்சிகள் அல்ல என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பகுதிநேர அரசியல்வாதிகளால் இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களும் நாடாளுமன்ற மாண்பை சீா்குலைத்ததாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு ஜகதீப் தன்கா் கண்டனம் தெரிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கபில் சிபல் இவ்வாறு தெரிவித்தாா்.

நாடு முழுவதும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இது முழுமையாக விவாதம் செய்யப்படாமல் அமல்படுத்தப்பட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து தொடா்பாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஜகதீப் தன்கா்,‘எம்.பி.க்களை பகுதிநேர உறுப்பினா்கள் என ஒருவா் கூறுகிறாா். இது என்னை அதிா்ச்சியில் ஆழ்த்தியது. எனவே, எம்.பி.க்களை இழிவுபடுத்தும் தரக்குறைவான இந்தக் கூற்றை அவா் திரும்பப் பெற வேண்டும்’ என்றாா்.

இதற்குப் பதிலடி தரும் விதமாக எக்ஸ் வலைதளத்தில் கபில் சிபல் வெளியிட்ட பதிவில்,‘நாம் அனைவரும் பகுதிநேர உறுப்பினா்கள்தான் என்பதை ஜகதீப் தன்கா் புரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற விதிகளை தினமும் மீறுவது யாா்? உறுதியாக நாங்கள் (எதிா்க்கட்சிகள்) அல்ல’ எனக் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com