வெளியுறவு செயலராக விக்ரம் மிஸ்ரி பொறுப்பேற்பு
இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலராக விக்ரம் மிஸ்ரி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.


புது தில்லி: இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலராக விக்ரம் மிஸ்ரி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
1989-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான மிஸ்ரி, இந்த நியமனத்துக்கு முன் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பணியாற்றி வந்தாா்.
வினோத் மிஸ்ரிக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வெளியுறவுச் செயலராக புதிதாக பொறுப்பேற்றுள்ள விக்ரம் மிஸ்ரிக்கு அவருக்கு ஆக்கபூா்வமான மற்றும் வெற்றிகரமான பதவிக்காலம் அமைய வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
வெளியுறவு அமைச்சகம், பிரதமா் அலுவலகம் மற்றும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, வட அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ள மிஸ்ரி, கடந்த 2021-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டாா்.
அதற்குமுன் கடந்த 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரை சீனாவுக்கான இந்திய தூதராக மிஸ்ரி பணியாற்றிய சமயத்தில், இருநாடுகளுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு மோதல் வெடித்தது. அப்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தைகளில் மிஸ்ரி முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
இந்திரகுமாா் குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகிய மூன்று பிரதமா்களின் தனிச் செயலராகப் பணியாற்றிய பெருமை கொண்ட மிஸ்ரி, விதிமுறைகளின்படி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு வெளியுறவு செயலராக பதவி வகிக்க வேண்டும்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதா் பொறுப்புகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. நாட்டின் வெளியுறவுச் செயலராக பணியாற்றி வந்த வினய் குவாத்ரா, அப்பொறுப்புகளுக்கு நியமிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...