
ஆடை அலங்கார அணிவகுப்பு(ஃபேஷன் ஷோ) நிகழ்ச்சியில் உலகத் தலைவர்கள் நடக்கும் செயற்கை நுண்ணறிவ்வு(ஏஐ) காணொலியை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தனித்துவ ஆடையில் நடந்து வருவதை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவு நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் பிரபலங்கள் பாடல் பாடுவது போன்று பல பொழுதுபோக்கு விடியோக்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டு தொழில்நுட்ப பிரியர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஏஐ ஃபேஷன் ஷோவுக்கான நேரம் என்று பதிவிட்டு காணொலி ஒன்றை எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் இன்று வெளியிட்டுள்ளார்.
அதில், போப் ஆண்டவர், ரஷிய அதிபர் விளாமிதீர் புதின் ஆகியோர் மாடர்ன் உடைகளில் நடந்து (ரேம்ப் வாக்) வருவதை போன்றும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சக்கர நாற்காலியில் வருவதை போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மேலும், எலான் மஸ்க், கைதி உடையில் டொனால்டு டிரம்ப், கழுத்தில் நெக்லஷுடன் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காவி, பச்சை உள்ளிட்ட நிறங்கள் கலந்த உடையில் நெற்றியில் பொட்டு வைத்தபடி, கண்ணாடி அணிந்து நடந்து வருவதை போன்று காட்சி அளிக்கிறார்.
இறுதியாக, மைக்ரோசாஃப்ட் கடந்த வாரம் முடங்கியதை கிண்டலடிக்கும் விதமாக, டெத் ஆஃப் ப்ளூ ஸ்கிரீன் கணினியுடன் அந்நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த காணொலி தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு நேரடி ஆதரவை எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் அதிபருமான ஜோ பைடன், உடல்நலக் குறைவு காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.