
சித்தூர் மாவட்டம் பங்குராபாளையம் மண்டலம் மகாசமுத்திரம் சுங்கச்சாவடி அருகே, பேருந்து ஓட்டுநர் மோதியதில், தனியார் பேருந்து டிரைவர் பலியானார்.
பெங்களூருவில் இருந்து விஜயவாடா செல்வதற்காக மார்னிங் ஸ்டார், ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் திங்கள்கிழமை இரவு பெங்களூருவில் இருந்து புறப்பட்டன.
ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டம் பங்குராபாளையம் மண்டலம் சுங்கச்சாவடி அருகே திங்கள்கிழமை இரவு 1.30 மணியளவில் இரண்டு பேருந்துகள் வந்தன.
இந்த நிலையில், ஒரு பேருந்தின் கண்ணாடி மற்றொரு பேருந்தின் மீது மோதியதால், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு பேருந்துகளும் மகாசமுத்திரம் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, இரு டிரைவர்களும் மீண்டும் இரண்டு பேருந்துகளையும் நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.
அதன்பின் ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் பேருந்து சுங்கச்சாவடியில் இருந்து முன்னோக்கி நகர்ந்தது.
மார்னிங் ஸ்டார் டிராவல்ஸ் டிரைவர் சுதாகர் ராஜு பஸ்சில் இருந்து இறங்கி ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் பேருந்து முன் நின்றார்.
இதற்கிடையில் ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் பேருந்து ஓட்டுநர் சீனிவாச ராவ், சுதாகர் ராஜு மீது கோபமடைந்து பேருந்தை அவர் மீது வேகமாக மோதினார்.
இதில் ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் பஸ்சின் அடியில் சிக்கிய சுதாகர் ராஜுவின் உடல் பேருந்தில் சிக்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் சுதாகர் ராஜு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசியானா சுங்கச்சாவடி அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் பேருந்து சுதாகர் ராஜு மீது பேருந்து மோதுவது பதிவாகியுள்ளது.
பாங்குராபாளையம் போலீஸார், டோல்கேட் அருகே இருந்த கண்காணிப்பு கேமராக் காட்சிகளை கைப்பற்றி, ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் பஸ் டிரைவர் சீனிவாச ராவை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சுதாகர் ராஜு குண்டூர் மாவட்டம் செப்ரோலு மண்டலம் பத்தரெட்டிபாலத்தைச் சேர்ந்தவர். பலியான சுதாகருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.